ஜெர்மனியில் கிறிஸ்தவம்


ஜெர்மனியில் கிறிஸ்தவம்

ஜெர்மனி ஒரு கிறிஸ்தவ நாடு ஆகும். ஏறக்குறைய அறுபது சதவீதம் மக்கள் கிறிஸ்தவர்களாகவே உள்ளனர். மதச்சுதந்திர நாடு எனப்படுவதால் மற்று மதத்தினரும் இறைவிசுவாசம் இல்லாதவர்களும் இங்கே அதிகமாக வாழ்கின்றனர். இலங்கை நாட்டிலிருந்து அகதிகளாக வந்த மக்கள் பலர் இந்து மத விசுவாசத்தையும் கடைபிடித்து வருகின்றனர். இந்நாட்டின் கலாச்சாரத்திலும்,  விழாக்களிலும் பழக்கவழக்கங்களிலும் கிறிஸ்தவம் அடிப்படைக் காரணியாகவே உள்ளது. ஒவ்வொரு ஊருக்கும் மத்தியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று மக்களின் கூட்டமைப்புக்கு அடையாளமாக அமைந்திருக்கும்.

கத்தோலிக்கத் திருச்சபையினர் 28 சதவீதம் மக்களாவர். பிரிவினை சபையினரும் ஏறக்குறைய இந்த எண்ணிக்கையில் உள்ளனர். கத்தோலிக்கத் திருச்சபையில் 27 மறைமாவட்டங்கள் உள்ளன. இவற்றுள் 10191 பங்குகள் அடங்கும்.  மொத்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை 2017-ஆம் ஆண்டு கணக்கின்படி 23311321 ஆகும்.  65 ஆயர்களும் 11444 மறை மாவட்ட குருக்களும், 2116 துறவறக் குருக்களும் 3308 திருத்தொண்டர்களும் இந்நாட்டு கத்தோலிக்க திருச்சபையை வலுப்படுத்தி வருகின்றனர். கோவில் வரி அரசுக்கு நேரடியாக கட்டும் நிலை உள்ளதால் ஜெர்மன் நாட்டு ஆலயங்கள் பொருளாதார நிலையில் மிகவும் வலுவாக உள்ளன.

கத்தோலிக்கத் திருச்சபையின் தோற்றம் ஜெர்மனியில் உரோமைப் பேரரசின் காலத்திலேயே உருவானது.  மூன்றாம் நூற்றாண்டிலேயே டிரியர், கொலோன் என்ற மறைமாவட்டங்கள் உருவானதாக வரலாறு மெய்ப்படுத்துகிறது. ஐந்தாம் நூற்றாண்டில் உரோமைப் பேரரசு ஜெர்மனியில் வீழ்ச்சியுற்ற போது கிறிஸ்தவமும் வீழ்ச்சியடைந்தது. எனினும் திருச்சபையினர் ஆங்காங்கே ஒரு சிலராக விசுவாசத்தில் நிலைத்திருந்தனர். உரோமைப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து எட்டு நூற்றாண்டுகளாக அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஆங்கிலேய நாடுகளின் மறை பணியாளர்கள் ஜெர்மனியில் மறை பணியாற்றத் தொடங்கினர்.

அன்றைய காலகட்டத்தில் ஜெர்மானிய அரசர் மக்கள் சார்பாக ஒரே ஒரு மதத்தை ஜெர்மனி நாட்டில் கடைபிடிக்கும் பொருட்டு தேர்ந்தெடுக்க முன் வந்தார். அரசர் மறை பணியாளர்களோடு பேச்சுவார்த்தை நடத்தினார். பேகன் மதத்து கடவுள்களின் அடையாளமான பழமையான ஓக் மற்றும் இலம் மரங்களை கிறிஸ்தவ மறை பணியாளர்கள் வெட்டி சாய்ப்பதாக இருந்தால் கிறிஸ்தவத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தார். பேகன் மதத்தவர்கள் பொன், வெள்ளி, ஆயுதங்கள், விலங்குகள், மனிதர்களை பலியாக ஒப்புக்கொடுத்து இந்த புனித மரங்களில் கட்டித் தொங்கவிட்டிருந்தனர்.  மறை பணியாளர்கள் எவ்வித பயமுமின்றி மரங்களை வெட்டி சாய்த்து கிறிஸ்தவ மறையின் வலிமையை எடுத்துக் காட்டினர். ஸ்காட்லாந்து மற்றும் ஆங்கிலேய மறை பணியாளர்களுள் முக்கியமானவர்கள் கொளும்பானுஸ் மற்றும் போனிபாஸ் ஆகியோர் ஆவர்.

புனித பொனிபாஸ் மறைபணி புரிந்து பல மறைபணித்தளங்களையும் மறைமாவட்டங்களையும் உருவாக்குகினார். 800-ாம் ஆண்டில் கிறிஸ்துமஸ் நாளில் சார்லமன் பேரரசர் திருத்தந்தையால் உரோமைப் பேரரசராக நியமிக்கப்படுகிறார். அப்போது முதல் ஜெர்மனியில் திருச்சபை மிகவும் வேகமாக செழித்து வளரத் துவங்கியது.

உரோமைப் பேரரசில் கத்தோலிக்க கிறிஸ்தவம்  அதிகாரப்பூர்வமான மதமாக கடைபிடிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பதினாறாம் நூற்றாண்டு வரை ஜெர்மனியில் கத்தோலிக்க கிறிஸ்தவம் மிகவும் உயர்ந்த ஓரிடத்ததை பெற்றிருந்தது.

கி.பி 1517-ல் மார்ட்டின் லூதர் என்னும் கத்தோலிக்க துறவியார் திருச்சபையின் சீர்திருத்தத்கிற்காக 95 கோரிக்கைகளை வெளிப்படுத்தினார். உரோமை கத்தோலிக்க திருச்சபை இவரது 95 கோரிக்கைகளையும் கண்டித்தது. நான்கே ஆண்டுகளில் திருச்சபையில விருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அவர் முதன்முதலாக ஜெர்மானிய மொழியில் விவிலியத்தை மொழிபெயர்த்தார். இவ்வாறு 1545 முதல் கத்தோலிக்கத் திருச்சபைக்குள் சீர்திருத்தம் என்ற பெயரில் சீர்திருத்த திருச்சபையினர் உருவாகினர். தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் சமூக அளவில் மக்களிடையே ஏற்பட்டன. கத்தோலிக்கத் திருச்சபையினரும் சீந்திருக்கத் திருச்சபையினருக்கும் இடையே சண்டைகளும் ஏற்பட்டன. தற்போது கத்தோலிக்கத் திருச்சபையும் சீர்திருத்தத் திருச்சபைகளும் மிகப் பெரிய சக்திகளாக ஜெர்மனியில் செயல்பட்டு வருகின்றன. மக்களும் வித்தியாசங்களை மறந்து தற்போது ஒன்றுக்கொன்று பேசி  உரையாடி மகிழ்ந்து வருகின்றார்கள்.

தற்போதைய கத்தோலிக்கக் திருச்சபையின் நிலை:
அரசு கத்தோலிக்கத் திருச்சபையையும் சீர்திருத்த திருச்சபையையும் சமமாகவே கருதுகிறது. எனவே பல கத்தோலிக்க பழக்க வழக்கங்களை கடைபிடிக்க சிரமம் ஏற்பட்டுள்ளது.
கோவில் வரி அனைவரும் இயல்பாகவே கட்ட வேண்டிய கட்டாயச் சூழ்நிலை உள்ளதால் பலர் திருச்சபையிலிருந்து வெரியேறுகின்றனர்.
விசுவாசிகள் ஞாயிறு திருப்பலிக்கு வருவதும் திருச்சபை கட்டளைகள் கடைபிடிப்பதும் தனிநபர் மனித சுதந்திரத்தைப் பொறுத்தே ஆகும். எனவே 1990 ஆம் ஆண்டில் 22 சதவிகமாக இருந்த ஆலயம் செல்வோரின் எண்ணிக்கை 2006-ஆண்டு 14 சதவீதமாக குறைந்து தற்போது மீண்டும் குறைந்தே வருகிறது.
அகதிகளின் வருகை அதிகரிப்பால் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் கிறிஸ்தவர்களின் நன்மையை பல முறைகளிலும் சூறையாடுவதாக உள்ளது.
குருக்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் மக்களுக்கு கிடைக்க வேண்டிய ஆன்மீகத் தேவைகள் சரியான முறையில் கிடைப்பதில்லை.
பல பங்குகளை இணைத்து பெரிய பங்குகளாக மாற்றியதனால் சிறிய திருச்சபை சமூகங்களில் இருந்த செயல்பாடுகள் அழிந்தே போயின.
திருச்சபையின் ஆட்சி அதிகார செயலமைப்பும் மக்களை பல நேரங்களில் விலகிச் செல்ல தூண்டுகிறது.
திருச்சபையில் ஆங்காங்கே நடக்கும் பிழைகளால் ஊடகங்கள் திருச்சபையை எதிர்மறையாக சித்தரிக்கின்றன.
குருக்களின் எண்ணிக்கை குறையும் போது திருத்தொண்டர்கள் மற்றும் வேதியர்களின் எண்ணிக்கை வெகு விரைவாக கூடுவதால் திருச்சபையில் புதிய ஆட்சி அமைப்பு பங்குகளில் புகுத்தப்படுகின்றது.
ஆலயங்களில் மறைக்கல்வி போன்ற அமைப்பு இல்லாத காரணத்தால் இளையோர் சமூகம் கிறிஸ்தவத்தை பற்றி எதுவுமே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.

இத்தகைய சவால்களின் மத்தியில் கிறிஸ்துவின் பணிகளை செவ்வனே செய்து வரும் மரியாவின் புதல்வியர் கன்னியர் சபையினரின் சேவைகளையும் பணி செய்யும் ஆர்வத்தையும் கட்டாயமாக பாராட்டியே ஆக வேண்டும். இத்தகைய சவால்கள் பலவிதங்களில் இவர்களது சேவைகளை செவ்வனே செய்ய தடையாக உள்ளன. வருடத்திற்கு ஒரு முறை நுழைவாணை (Visa) பெற்றுக் கொள்ள கன்னியர்களின் உடையிலேயே பல மணி நேரம் நீண்ட வரிசையில் குளிரையும் தாங்கி காத்து நிற்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பல நேரங்களிலும் திருப்பலி நேரங்களில் அருட் கன்னியர்கள் மட்டுமே பதிலுரைகள் கூற வேண்டிய நிலையும் உள்ளது. ஜெர்மனி என்றால் ஏதோ பெருமை என்ற தப்பெண்ணத்தை மாற்றி சவால்களோடு போராடி வாழும் அருட் கன்னியர்களின் சேவைகளை மனமார பாராட்டுவோம். அவர்களின் பணி சிறக்க வாழ்த்துவோம்.
  Fr.Maria John

Comments

Popular posts from this blog

மறைக்கல்வியின் பதினொன்றாம் வகுப்பு குறு வினாவிடைகள்

திருவழிபாட்டு க்விஸ் (மறைக்கல்வி நூலை (5th to 10th) அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது)

மலங்கரை கத்தோலிக்கத் திருச்சபை