1.7.2025 மார் இவானியோஸ் நினைவுரை - ஆயர் ஆன்றணி மார் சில்வானோஸ்
வணக்கத்துக்குரிய பேராயர் மார் இவானியோஸ்
ஆண்டகையின் 72 ஆவது நினைவுத் திருநாளுக்கு முந்தைய 15தயாரிப்புத் தினங்களின் முதல்
நாளே இன்று ஆகும். ஜூலை மாதம் முதலாம் நாளில் இத்தயாரிப்பு தினத்தை தனிப்பட்ட
முறையில் தனிக்கவனத்துடன் சிறப்பிக்க வேண்டும்.
இறை வார்த்தையில் நிலைத்திருந்த மார் இவானியோஸ்
என்ற மையச் சிந்தனையின் அடிப்படையில் மறையுரை எண்ணங்களை பகிர்வோம்.
வணக்கத்துக்குரிய மார் இவானியோஸ்
இறைவார்த்தைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக வாழ்ந்திருந்தார். அவரது துறவு வாழ்வை
வலுவுடன் தொடர்வதற்கு இறை வார்த்தையே அவருக்குத் துணை நின்றது. தினமும் இறை
வார்த்தையை வாசிக்கவும் எண்ணங்களை ஆய்வு செய்யவும் தியானிக்கவும் அவரால் இயன்றது. ஆசிரமத்தவர்களையும்
இறைவார்த்தை அடிப்படையிலான வாழ்வில் வாழ்வதற்கு பயிற்சிகளையும் வழங்கியிருந்தார். இறைவார்த்தையால்
கிடைக்கின்ற தைரியத்தையும் பலத்தையும் அருள்பொழிவையும் தனது தனிப்பட்ட வாழ்வில்
அவர் அனுபவித்து வாழ்ந்திருந்தார். அவரது எதிர்கால வாழ்வின் ஒவ்வொரு காரணிகளிலும்
இறைவார்த்தை மிக முக்கியமான பங்கு வகித்துள்ளது.
பெதனி என்ற பெயரையும் இறைவார்த்தையை
மையப்படுத்தியே அவர் தேர்ந்தெடுத்தார். தான் துவங்கவிருக்கும் துறவு சபைக்கு என்ன
பெயர் வழங்க வேண்டும் என ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்திருந்த போது அவரது அகக்கண்கள்
விவிலியத்தை நோக்கிய வண்ணம் இருந்தன. பெதனியின் இலாசர், மார்த்தா மற்றும் மரியா
இவர்களுடைய வீட்டுக்குள் நுழைந்த போது இயேசு அன்பு, ஆறுதல் மற்றும் மகிழ்வை
பெற்றுக் கொள்கின்ற அனுபவமாக அமைந்திருந்தது. இவ்வாறு விவிலியத்தை மையமாகக் கொண்ட
பெதனி என்ற பெயரைத் தான் தான் துவங்கிய துறவு சபைக்கு வழங்குகின்றார்.
அவர் திருத்தொண்டராக பணியாற்றிய போதும்
குருவானவராக பணியாற்றிய போதும் இறை வார்த்தை மையமான மறையுரைகளை நிகழ்த்துவதற்கு
தனிப்பட்ட பேரார்வம் கொண்டிருந்தார். பத்தனம்திட்டையில் நடத்தப்பட்ட கன்வென்ஷன்
கூட்டத்தில் தொடர்ந்து பத்து ஆண்டுகள் நற்செய்தி பகிர்வு மறையுரைகளை அவர் நல்கியிருந்தார்.
அவ்வாறே பெதனிக் குருக்களுக்கும் அருள் சகோதரர்களுக்கும் இறைவார்த்தையின்
விளக்க உரைகளை எடுத்துரைப்பதற்கு தனிப்பட்ட பயிற்சிகளை வழங்கி இருந்தார்.
திருத்தொண்டராக
இருந்தபோது இறை வார்த்தைகளை மையமாகக் கொண்டு அருளடையாளங்களைப் பற்றி எடுத்தியம்புவதற்கும்
ஆர்வம் காட்டியிருந்தார். அவ்வாறு “அருளடையாளங்களின் திருத்தொண்டர்” என்ற
பெயரையும் அவர் பெற்றிருந்தார். குறிப்பாக மறுமலர்ச்சித் திருச்சபைகளின் தவறான
போதனைகளுக்கு எதிராக அருளடையாளங்களின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பி பல மறையுரைகளை
அவர் எடுத்துரைத்தார்.
அன்புக்குரியவர்களே!
வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் இறைவார்த்தைகளை மறையுரைகளாக எடுத்தியம்புவது
மட்டுமல்ல. இறை வார்த்தைகளை தனது வாழ்வின் பகுதியாகவே கொண்டு தனது வாழ்வு
முழுவதையுமே இறை வார்த்தைக்காகவே சமர்ப்பித்து வாழ்ந்து வந்தார்.
இரண்டு
இறை வார்த்தைப் பகுதிகள் அவருக்குத் தூண்டுதலாக அமைந்திருந்தன. இறை வார்த்தைகளை
வாசித்து அறிதல் மட்டுமல்ல. அதனை தனது வாழ்வாக்கிய இரண்டு வழிகளை நாம் காண
முடியும்.
மத்தேயு 13: 44 இறை வார்த்தையில் "ஒருவர்
நிலத்தில் மறைந்திருந்த புதையல் ஒன்றைக் கண்டுபிடிக்கிறார். அவர் அதை மூடி மறைத்து
விட்டு மகிழ்ச்சியுடன் போய்த் தமக்குள்ள யாவற்றையும் விற்று அந்த நிலத்தை
வாங்கிக்கொள்கிறார். விண்ணரசு இப்புதையலுக்கு ஒப்பாகும்.” பேராயர் மார் இவானியோஸ் இயேசு
எனப்படும் மிகப்பெரிய புதையலைக் கண்டடைந்த உடன்
வாழ்வில் மற்றவை
யாவற்றையும் வெறுத்து ஒதுக்குகிறார். மற்றவை அனைத்திற்கும் கொடுக்க வேண்டிய தரத்தைக்
குறையச் செய்கிறார். மற்றவை அனைத்தையும் விட்டுவிடுவதற்கும் அவர் தயாராகிறார்.
பிலிப்பியர்
மூன்று 7 முதல் 9 வரை உள்ள இறை வார்த்தைகளில், “ஆனால் எனக்கு ஆதாயமான இவை அனைத்தும்
கிறிஸ்துவின்பொருட்டு இழப்பு எனக் கருதினேன். உண்மையில், என்னைப் பொறுத்தமட்டில்
என் ஆண்டவராம் கிறிஸ்து இயேசுவைப் பற்றிய அறிவே நான் பெறும் ஒப்பற்றச் செல்வம்.
இதன் பொருட்டு மற்ற எல்லாவற்றையும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் பொருட்டு நான்
அனைத்தையும் இழந்து விட்டேன். கிறிஸ்துவை ஆதாயமாக்கிக்கொள்ள எல்லாவற்றையும் குப்பையாகக்
கருகிறேன். கிறிஸ்துவோடு இணைந்திருப்பதற்காகத்தான் நான் இவ்வாறு கருதுகிறேன்.
திருச்சட்டத்தின் அடிப்படையில் நான் கடவுளுக்கு ஏற்புடையவனாக இயலாது.
கிறிஸ்துவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால்தான் அவருக்கு நான் ஏற்புடையவன்
ஆகமுடியும். இந்த ஏற்புடைமை கடவுளிடமிருந்து வருவது; நம் நம்பிக்கையை அடிப்படையாகக்
கொண்டது.”
பேராயர்
மார் இவானியோஸ் இயேசு எனப்படும் புதையலைக் கண்டடைந்த உடன் யாவற்றையும்
விட்டுவிட்டு இயேசுவை சொந்தமாக்கத் தயாராகின்றார். அவர் கத்தோலிக்க திருச்சபை எனப்படும்
புதையலை கண்டடைந்த உடன் கத்தோலிக்க திருச்சபையின் ஒன்றிப்புக்காக மற்ற யாவற்றையும்
வெறுக்கின்றார். புதையலைக் கண்டடைந்தவன் யாவற்றையும் விற்று வயலை வாங்கியவரைப்
போன்று இவ்வுலகில் விலை மிகுந்த யாவற்றையும் விலையற்றதாக கருதிய திருத்தூதர் பவுலைப்
போன்று மார் இவானியோஸ் தனது வாழ்வில் இரண்டு சாத்தியக் கூறுகள் தனக்கு முன்னால்
அமைந்திருக்கின்ற போது அவற்றுள் ஆறுதல் தரும் தலத்தைத் தவிர்த்து தீவிரமான
மாற்றுத்தலத்தை தேர்ந்தெடுத்தார். இவ்வாறு சவால்கள் துயரங்கள் தடைகள் நிறைந்த
தீவிரமான மாற்றுத்தலத்தை தேர்ந்தெடுக்கவே முன் வந்தார். இயேசுவே புதையல் எனக்
கண்டடைந்த போது, அவரது கத்தோலிக்க திருச்சபையே முழுமையானது எனக் கண்டடைந்த போது யாவற்றையும்
விட்டு விடுவதற்கு அவர் தயாரானார். அவரது வாழ்வில் நடந்த அனைத்து துயர
நிகழ்வுகளிலும் இத்தகைய ஒரு சூழலை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.
இளமைப்
பருவத்தில் அவரை அவரது தகப்பனார் பாதுகாப்பு படை வீரராக பணியமர்த்த விரும்பிய போது
ஆனால் அவர் ஒரு குருவானவராக மாற வேண்டும் என தீவிரமான மாற்றுத்தலத்தை
தேர்ந்தெடுக்கின்றார்.
திருத்தொண்டராக
சாதாரணமான முறையில் வாழ்ந்து வந்திருக்கலாம். ஆனால் தனது பணி வாழ்வில் மறையுரைகளை
நிகழ்த்துவதற்கும் அருளடையாளங்களைப் பற்றி கற்பிப்பதற்கும் தன்னை முழுவதுமே
சமர்ப்பித்து தியாகத்துடன் வாழ முன் வருகின்றார்.
திருமணமாகி
ஒரு குருவானவராக அவருக்கு வாழ்ந்திருக்கலாம். சென்னை கிறிஸ்தவ கல்லூரியில் எம் ஏ
முதுகலை பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பின்னர் திருமணம் செய்திருக்கலாம். ஆனால்
தீவிரமான மற்றொரு தலத்தை அவர் தேர்ந்தெடுக்கின்றார்.
எம்டி
செமினாரியின் முதல்வராகவும் வட்டச்சேரில் ஆயரோடு இணைந்த நிர்வாகக் குழு நபர்களோடு
நல்லுறவில் நிலைத்திருந்த போது யாவற்றையும் விட்டு செராம்பூர் கல்லூரி நோக்கி
யாருமே எதுவும் அறிமுகமில்லாத ஓர் இடத்திற்கு பயணமாகின்ற தீவிரமான மாற்றுத்தலத்தை
அவர் தேர்ந்தெடுக்கின்றார்.
செராம்பூர்
கல்லூரியில் அனைத்து சலுகைகளையும் பெற்று உயர்ந்த ஊதியத்தை - இன்றைய ஒரு லட்சம்
ரூபாய் வரையிலான ஊதியத்தை - பெற்று வாழ்ந்த அந்த நபர் யாவற்றையும் விட்டுவிட்டு
சாதாரண குருவானவரை விடவும் ஒரு துறவியாக வாழ வேண்டும் எனத் தீர்மானிக்கின்றார்.
மலங்கரை
திருச்சபையின் கீழ்த்தளத்தில் படிந்திருக்கும் கறைகளை எவரையும் குறை கூறாமல் நானே
என்னை தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
தன்னையே மறுமலர்ச்சி
அடையச் செய்வதற்கு செரம்பூர் அனைத்து சலுகைகளையும் விட்டுவிட்டு முண்டன் மலைக்கு
ஒரு ஏழைத் துறவியாக உள் நுழைகின்றார்.
புதையலையைக்
கண்டவன் யாவற்றையும் - விலைமதிப்புள்ள யாவற்றையும் விற்று விடுகிறான். இவ்வாறு
பேராயர் மார் இவானியோசும் செரம்பூரில் அனைத்து
சலுகைகளையும் விட்டு விடுகிறார்.
முண்டன்
மலையின் 400 ஏக்கர் நிலப்பரப்பு முழுவதையும் கத்தோலிக்க திருச்சபை என்னும் புதையலைக் கண்ட
உடனடியாக அவ்விடத்திலிருந்து வெளியேறிய போது அக்குழுமத்தின் பெயரில் எழுதிக் கொடுத்த
பின்னர் வெறுங்கையோடு வெளியேறுகின்றார்.
சுருக்கமாக
கூறுவதாக இருந்தால் இருளுக்குள் தாவுதல். நிலமில்லை. மக்கள் இல்லை. ஆலயம் இல்லை. ஆறுதல்
தருகின்ற தலத்தை விட்டு விடுகின்ற போது தீவிரமான தலத்தை தேர்ந்தெடுக்கின்ற போது
தான் அனுபவிக்கக் கூடிய துயரங்கள் அனைத்தையும் அவர் முன்கூட்டியே அறிந்திருந்தார்.
புதையலைக் கண்டடைந்த உடன் அப்புதையலை பெற்றுக்கொள்ள மற்ற யாவற்றையும் அவர்
விட்டுவிடுகின்றார்.
“தேனை
சுவைத்தவுடன், தேனீ கொட்டியதை மறந்து விடுவதைப் போன்று” தான் சந்திக்கின்ற
சவால்களை எல்லாம் பொருட்டாகக் கருதாது அவர் முண்டன் மலையிலிருந்து
வெளியேறுகின்றார். இறைவனுடைய திருக்கரங்களிலேயே அவர் தன்னையே சமர்ப்பிக்கின்றார்.
இவ்வாறு
அனைத்து ஆறுதல் தருகின்ற தலத்திலிருந்து தீவிரமான மாற்றுத்தலத்திற்கு அவர்
நுழைவதற்கு அவரை தயாராக்கியது இறை வார்த்தையில் மையமான அவருடைய வாழ்வு ஆகும். தான்
உறுப்பினரான திருச்சபையிலே தொடர்ந்திருந்தால் மலங்கரையின் பேராயராகவோ உயர்பேராயராகவோ
உயர் பதவியை பெறுவதற்கான எல்லா விதமான தகுதியும் பெற்றவர் தான் அவர். ஆனால்
யாவற்றையும் விட்டுவிட்டு கத்தோலிக்க திருச்சபையோடு மறுஒன்றிப்படைந்த போது அவர்
பெற்றுக் கொண்ட வரவேற்புகள் மகிழ்வானதாக அமைந்திடவில்லை.
ஏளனங்களும்
கேலிக்கூத்துகளும் அவர் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் கத்தோலிக்க திருச்சபை
என்னும் புதையலைக் கண்டடைந்த மகிழ்வில் அவர் திளைத்திருந்தார்.
இவ்வாறு
இறைவார்த்தைகளின் மறையுரைகளை நிகழ்த்துவது மட்டுமல்ல அதனை வாழ்வாக்கிக் கொண்டு
தனது வாழ்வில் அதனை மாமிசமாக உருவாக்கி தனது வாழ்வை இறைவனின் சன்னிதியில்
பரிபூரணமாக சமர்ப்பித்தார்.
இன்று
வணக்கத்திற்குரிய பேராயர் மார் இவானியோஸ் 72 ஆவது நினைவுத்திருந்தாளைக்
கொண்டாடுவதற்கான தயாரிப்பில் நுழைகின்ற போது யாவற்றையும் விலையற்றதாக அவர்
காண்கின்றார். இவ்வாறு இறைவார்த்தையை அவர் மாமிசமாக்கி வாழ வைத்தார். இவ்வாறு நாம்
மிகப்பெரிய இறைமக்கள் சமூகத்திற்குள் நுழைய முடிந்தது என்பதே மிகப்பெரிய காரணியாக
அமைந்துள்ளது.
“கத்தோலிக்க
திருச்சபையினராக இருப்பதில் பெருமை கொள்வோம்” என பேராயர் மார் இவானியோஸ் அடிக்கடி
எடுத்தியம்புவார். திருச்சபையின் முழுமை கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே உள்ளது
எனவும், திருச்சபையின் நான்கு குணங்களும் கத்தோலிக்க திருச்சபையில் மட்டுமே உண்டு
எனவும் அறிந்தபோது புதையலைத் தேடி அவர் வந்திருந்தார். வணக்கத்துக்குரிய பேராயர்
நமக்காக விண்ணகத்திலிருந்து பரிந்துரை வேண்டுவார் என்ற நம்பிக்கையோடு நமது
தனிப்பட்டக் கருத்துக்களையும் திருச்சபையின் கருத்துக்களையும் வணக்கத்துக்குரிய
பேராயர் மார் இவானியோஸ் அவர்களுடைய முன்னிலையில் சமர்ப்பித்து இன்றைய திருப்பலியில்
ஒப்புக்கொடுத்து மன்றாடுவோம்.
- ஆயர் ஆன்றணி மார் சில்வானோஸ்

Comments
Post a Comment